– பூநகரி சம்பவம் குறித்த முன்னாள் தவிசாளர் நிரோஷ்
உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை திட்டமிட்டு திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை பிழையாக வழிநடத்தி அரச உத்தியோக்தரின் தொழில் சுதந்திரத்திலும் செயற்பாடுகளிலும் தடை ஏற்படுத்தவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், அப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்ற நடைமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைவாக செயற்பட்டதனை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி பிரதேச அரசியல்வாதிகள் கத்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை தயாரித்துள்ளனர். அதனை யாழ் – கிளிநொச்சி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இது பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் அடாவடித்தனமாகும்.
அடிப்படையில் இவ்விடயம் குறித்த ஆராய்கையில், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி ( ) யில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் சட்ட திட்டங்களுக்கு முரணாக, பெறுமதியான வீதியோரக் காணிகளை தனக்கு தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு அரசாங்க ஒத்துழைப்பு காணப்பட்டுள்ளது. இங்கு மீறப்படும் உள்ளுராட்சி சட்டவிதிகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை புறந்தள்ளி அரசியல் அதிகார மமதையில் குறித்த எதிர்த்தரப்பினர் உத்தியோகத்தர்கள் மற்றும் அச் சபையின் பொறுப்பதிகாரி, சபையின் தீர்மானங்களை தற்போது மேற்கொள்ளத்தக்க செயலாளர் மீது பலவந்தத்தினை பிரயோகித்துள்ளனர். பலவந்தத்திற்கு இடமளிக்காத உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமது காணி அபகரிப்பு நோக்கம் நிறைவேறுவதற்கு உள்ளூராட்சி மன்றம் தடையாகவுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மீது அவதூறு மற்றும் அச்சுறுத்தல் பிரயோகிப்புக்கள் நடைபெற்றுள்ளன. மேலும் தாக்குதல் மேற்கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம் மேற்கொண்டுவிட்டு தமது வசதிக்கு ஏற்றால் போல் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் கத்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். இதனால் உள்ளூராட்சி மன்ற பணியாளர்களின் கௌரவம் மற்றும் தொழிற்சுதந்திரம் அரசாங்க அதிகாரத்தினால் மீறப்பட்டுள்ளது.
இப்படியான அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறைகள் ஜனநாயக விரோதமானவை என்பதுடன் சட்டம் ஒழுங்கிற்கும் அப்பாற்பட்டவை. பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்களின் தொழிற்சுதந்திரத்தினையும் அவர்களது உரிமைகளையும் மீறுவனவாகும். அரசியல் தலையீடுகள் இன்றி நீதியான முறையில் உத்தியோகத்தர்கள் சேவையாற்றுவதற்கான அகப் புறச் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பள்ள அரசாங்கத் தரப்பு சற்றேனும் அரசியல் தர்மத்திற்கு இடமளிக்காது மக்கள் விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவதையே இது காட்டுகின்றது. நல்லாட்சிக்கான தத்துவம் தொடர்பாக ஆளுங்கட்சி கவனம் செலுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீனம் அரச அதிகாரங்களால் பாதிக்கப்படும் போது அவற்றினை நாம் பார்த்திருக்க முடியாது என்றார்.